புதன், செப்டம்பர் 23, 2009

புலிக்கும் பொருந்தும் பாரதியின் "பெல்ஜியத்திற்கு வாழ்த்து"...

அகமும் புறமும் அறிவாய், சொல்லும் செயலும் சுடராய் வாழ்ந்த சுத்தமான ஆண்மகன் மகாகவி பாரதியின் கவிதை தொகுப்பில் நெருப்பு கவிஞன் வரைந்த "பெல்ஜியத்திற்கு வாழ்த்து" என்ற கவிதையை கண்டேன், புலிக்கும் அது பொருந்துவதாக ஒரு நினைப்பு..


இதோ பாரதியின் "பெல்ஜியத்திற்கு வாழ்த்து"


அறத்தினால் வீழ்ந்து விட்டாய்!
    அன்னியன் வழிய னாகி
மறத்தினால் வந்து செய்த
    வன்மையைப் பொறுத்தல் செய்வாய்:
முறத்தினால் புலியைத் தாக்கும்
    மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினால் எளியை யாகிச்
   செய்கையால் உயர்ந்து நின்றாய்!


வண்மையால் வீழ்ந்து விட்டாய்!
    வாரிபோற் பகைவன் சேனை
திண்மையோடு அடர்க்கும் போதில்
    சிந்தனை மெலித லின்றி 
ஒண்மைசேர் புகழே மேலென்று
    உளத்திலே உறுதி கொண்டாய்;
உண்மைதேர் கோல நாட்டார் 
    உரிமையைக் காத்து நின்றாய்!


மானத்தால் வீழ்ந்து விட்டாய்!
    மதிப்பிலாப் பகைவர் வேந்தன் 
வானத்தாற் பெருமை கொண்ட 
    வலிமைதான் உடைய னேனும்.
ஊனத்தால் உள்ள மஞ்சி
    ஒதுங்கிட மனமொவ் வாமல் 
ஆனதைச் செய்வோ மென்றே 
    அவன்வழி எதிர்த்து நின்றாய்!


வீரத்தால் வீழ்ந்து விட்டாய்!
    மேல்வரை யுருளுங் காலை
ஓரத்தே ஒதுங்கி தன்னை 
    ஒளித்திட மனமொவ் வாமல்,
பாரத்தை எளிதாக் கொண்டாய்;
    பாம்பினைப் புழுவே என்றாய்;
நேரத்தே பகைவன் றன்னை
    நில்லென முனைந்து நின்றாய்;


துணிவினால்  வீழ்ந்து விட்டாய்!
    தொகையிலாப் படைக ளோடும் 
பினிவளர் செருக்கி னோடும் 
    பெரும்பகை எதிர்த்த போது
பணிவது கருத மாட்டாய்;
    பதுங்குதல் பயனென் றெண்ணாய்;
தணிவதை நினைக்க மட்டை
    நில்லென தடுத்தல் செய்தாய்.


வேருளுத லறிவென் றெண்ணாய்;
    விபத்தையோர் பொருட்டாக் கொள்ளாய்;
சுருலை வெள்ளம் போலத்
    தொகையிலாப் படைகள் கொண்டே
மருளுறு பகைவர் வேந்தன் 
    வலிமையாற் புகுந்த வேளை
"உருளுக தலைகள், மானம் 
    ஓங்குகெ"ன்  றெதிர்த்து நின்றாய்.


யாருக்கே பகையென் றாலும்
    யார்மிசை இவன்சென் றாலும்
ஊருக்குள் எல்லை தாண்டி
    உத்தர வெண்ணி டாமல்,
போருக்குக் கோலம் பூண்டு
    புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கு இடமில் லாமல் 
    வெட்டுவேன் என்று நின்றாய்.


வேள்வியில் வீழ்வ தெல்லாம் 
    வீரமும் புகழும் மிக்கு
மீள்வதுண் டுலகிற் கென்றே
    வேதங்கள் விதிக்கும் என்பார்;
ஆள்வினை செய்யும் போதில்
    அறத்திலே இளைத்து வீழ்ந்தார்
கேள்வியுண் டுடனே மீளக்
    கிளர்ச்சிகொண் டுயிர்த்து வாழ்தல்.


விளக்கொளி  மழுங்கிப் போக 
    வெயிலொளி தோன்று மட்டும்,
களக்கமா ரிருளின் மூழ்குங்
    கனகமா ளிகையு முண்டாம்;
அளக்கருந் தீதுற் றாலும் 
    அச்சமே யுளத்துக் கொள்ளார்,
துளக்கற ஓங்கி நிற்பர்;
    துயருண்டோ துணிவுள் ளோர்க்கே?
                    
                                 -- சுப்ரமணிய பாரதி.
       
என்று தோற்பினும் துணிந்தோரை தூக்கிபிடிக்கும் உண்மையான நெறிக்கவிஞன் பாரதியை உளத்திலேர்போமாக... உண்மை விளங்குவோமாக!


--
சாவண்ணா மகேந்திரன்