Kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 08, 2011

மழைத்தவளையாய் ....பாகம் 4.

யார் தலைவன்
----------------------
யார் தலைவன்? பிரபலமாக பிழைப்பவனா,
பிறர் பலம் ஆகா உழைப்பவனா?
யார் தலைவன்? மக்கள் வெளிச்சத்தில் நிற்பவனா?
மக்களை வெளிச்சத்தில் நிறுத்துபவனா?
யார் தலைவன்? இனம் காக்க கம்பு தூக்குபவனா?
பணம் காக்க சொம்பு தூக்குபவனா?
யார் தலைவன்? ஊர்காக்க சாதித்து காட்டுபவனா ?
ஊழல்காக்க சாதியை காட்டுபவனா?
யார் தலைவன்? கோடிகோடியாய் கள்ள பணம் சேர்ப்பவனா?
தெருத்தெருவாய் நல்ல மனம் சேர்ப்பவனா.
யார் தலைவன்? புலியையும் புழுவாய் வளைப்பவனா?
புழுவையும் புலியாய் வளர்ப்பவனா?
யார் தலைவன்? கொடுமைகள் கண்டும் பொத்திக்கொண்டு இருப்பவனா?
கத்திக்கொண்டாவது இருப்பவனா?


மடையர் சாதி
--------------------
 
எங்கோ எவனோ எவனையோ வெட்ட
இங்கோ என்கழுத்திலும் கத்தி
நாம் அவனும் ஒரே சாதியென
எவனோ சொன்னதால்...

கருவறையும் கழிவறையும்
-----------------------------------------
கருவறையை கழுவுதலும்,
கழிவறையை கழுவுதலும்
பொதுமக்கள் வாழ்வை பேணும்
புனிதமான செயல் எனக்கொள்வோம்...


யார்  அல்ல, என்ன 
-----------------------------
கொள்கைகளே நாம் எதிர்ப்பது, கொண்டவர்களை அல்ல.
கருத்துக்களே நாம் விமர்சிப்பது, கருதியவரை அல்ல.
கலைகளே நாம் ரசிப்பது, கலைஞர்களை அல்ல. 
எழுத்துக்களே நாம் படிப்பது, எழுத்தாளரை அல்ல.



சுரனையும்  சுதந்திரமும் 
-------------------------------------------
கூடி நின்று கொடி பிடித்து கோசமிட்டு
கேசம் சீவும் மாடி வீட்டு மதியாதவன்கிட்ட
மணிக்கணக்கா மண்டியிட்டு
அடிவாங்கி உதைவாங்கி
அற்பபிறவியாய் அவதியுற்று
கெஞ்சி கூத்தாடி கிழவர்கள் வாங்கித்தந்த
சூம்பிப்போன சுதந்திரத்தை சொக்கி பார்க்கும்
சுகவாசி ஆடுகள் அறிவதில்லை,
வேங்கைகளின் சுதந்திர வேகமும், தாகமும் ...!

எது கவிதை...
---------------------

நெடியில்லா சொல்லெடுத்து,
நேர்மையான கருத்துவைத்து,
சொற்சுவையும் பொருட்சுவையும்
சொட்ட சொட்ட தேன்போல,
செருக்கோடு கையளிக்க புலவன்
வாய்ருசித்து மெய்யுருகி
வாய்ச்சொல் ஏதுமின்றி,
மலங்கவைப்பது கவிதையா?

மடித்து மடித்து எழுதி,
மதிப்பில்லா கதைசொல்லி
மலங்கக்குவது கவிதையா,
இதுபோல்?

திங்கள், டிசம்பர் 06, 2010

மழைத்தவளையாய்....கவிதைகள் பாகம் 3

நீதி மனு:
ஆறாம் வகுப்பில் அதிசயித்து,
ஏழாம் வகுப்பில் எட்டிபிடித்து,
எட்டாம் வகுப்பில் கூட்டாளியாகி,
ஒன்பதாம் வகுப்பில்  ஒன்றாய்படித்து,
பத்தாம் வகுப்பிலும் என்னை முந்திவிட்ட,
என் பால்ய வகுப்பறை தோழன்,
பழகியதொழில் செய்து பிழைக்கிறான்,
பட்டப்படிப்பிற்கு பணமில்லை என்பதாலும்,
பாட்டன்பெயர் பார்த்தசாரதி என்பதாலும்.

சந்தனச் சாணி:
வலியவன் கூட்டம் வாரியள்ளி பூசியது
சந்தனமும் சவ்வாதுமாய்,
எளியவன் நானுமள்ளி பூசினேன்
நாறியது நாய்விட்டையாய் சாதி ...

காந்தியும் கருவியும் ...

எம்மினம்காக்க ஏந்துவேன் எக்கருவியும்
காந்தி சொன்னார்
சிலை வைத்தார்கள்,

அவ்வினம் காக்க அவர் பேரன்
கத்தி  சொன்னான்
சிறை வைத்தார்கள் ...


வேங்கைகளும் ஆடுகளும் ...

கூடி நின்று கொடி பிடித்து கோசமிட்டு
கேசம் சீவும் மாடி வீட்டு மதியான்கிட்ட 
மணிக்கணக்கா  மண்டியிட்டு
அடிவாங்கி உதைவாங்கி
அற்பபிறவியாய் அவதியுற்று
கெஞ்சி கூத்தாடி கிழவர்கள்  வாங்கித்தந்த
சூம்பிப்போன சுதந்திரத்தை சொக்கி பார்க்கும்
சுகவாசி ஆடுகள் அறிவதில்லை
வேங்கைகளின் சுரணையும் சுதந்திரமும்  ...!