வெள்ளி, பிப்ரவரி 01, 2019

அரசியலில் பாயும் புலி

1 முன்னுரை :-

இந்திய அரசியலில்,  மொழிவழி தேசிய இனங்கள் தம்மை தாமே ஆண்டுகொள்ளும் இந்திய மாநிலங்கள் அனைத்திலும் புதிய காட்சிகள் அவ்வப்போது தொடங்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன; சில பொதுதேவைக்காகவும், சில சுய தேவைக்காகவும்.

போட்டியிடும் கொள்கைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கைக்கு குறைவான  கொள்கை வித்தியாசங்கள் இருக்கும் சூழலில்தான், ஏதேனும் ஒரு கொள்கையாவது அதன்  சிந்தனையை சாதித்துக்காட்ட முடியும், அப்படி  முடியாவிட்டால் சரி செய்துகொள்ளவும் முடியும். ஆயிரம் சிந்தனைகள், ஆயிரம் கொள்கைகள், ஆயிரம் நெறிமுறைகள், ஆயிரம் முரண்பாடுகள் இருந்தால் அதனை பகுப்பாய்ந்து சரியானது இவைஇவையென தேர்ந்தெடுக்க நாட்டின் சராசரி அறிவும் வளர்ந்திருக்கவேண்டும். இங்கு நிலைமை அப்படி இல்லையென்பதால் கட்சிகளும், ஆட்சிகளும் நாட்டிற்கு கேடுகளையே விளைவிக்கின்றன.

2 சூளுரை:-

தன்னை தலைவராக உயர்த்துபவர்கள், உலக நிலைமையை  அறியாதவர்களாக, தலைமைத்துவத்தை உணராதவர்களாக, சுயதிறமை இல்லாதவர்களாக, தவறான வழிமுறைகளை ஏற்பவர்களாக இருக்கிறார்கள். தலைமையென்பது மாலை மரியாதை வாங்கும் பதவியாக பார்க்கிறார்கள், அது ஒரு பொறுப்பு என்றும், அது ஒரு மனிதனின் உட்சபட்ச ஞாயத்தையும், ஞானத்தையும்  ஊருக்கு கொடுப்பதாக இருத்தல் வேண்டுமென்றும் அறிந்தவர்களாக அவர்கள் இல்லை. பெரும்பாலும் தனிமனித செல்வாக்குகளையும் , கொட்டிக்கிடக்கும் செல்வங்களையும்  முதலீடாக பயன்படுத்தி வல்லமை சேர்த்து நாட்டிற்கு நல்லதுசெய்ய நினைத்து,  தொலைநோக்குப் பார்வையின்றி, வேறேதும் திறமையற்ற ஒரு சுயநல கூட்டத்திற்கு தலைமை ஏற்று, வழிநடத்த முடியாமல் திணறி சமரசம் செய்து, தோற்றுப்போய் தன் கொள்கைகளை நம்பிய மக்களையும், பிற கொள்கைகளை நம்பிய மக்களையும்,  பொதுவான நாட்டையும் தோற்கடிக்கின்றனர் திறமற்ற தலைவர்கள்.

3 களநிலைமை :-

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், திராவிட கட்சிகள் சாதித்திருந்தாலும், அவை சரிவர நடத்தப்படாததின் விளைவே இன்றைய தற்சார்பற்ற நிலையும் , தலைவணங்கும் நிலையும், தவிக்கும் நிலையும் வரக்காரணமென்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இந்நிலை வருமென்று எத்தனையோ அறிஞர்கள் அன்றே கூறியிருக்கலாம், அவை மக்களால் செவிமெடுக்கப்படாமல் போயிருக்கலாம், ஆனால் தமிழர்களின் அத்தோல்வி இன்னும் தொடர்வது நல்லதல்ல, அது மனித  நாகரீகத்தின் அடுத்த கட்டமுமல்ல. வரலாற்றிலிருந்து படம் எடுப்பதுபோல, பாடமும் எடுக்கப்படவேண்டும்.

4 புதிய  கட்சி :-

அந்தவகையில், இப்போது நடிகர் ரஜினி ஒரு அரசியல் கட்சியை  அமைக்கப்போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார். இன்றைய கள அரசியல் குழுக்களை கிண்டல் செய்தும், எதிர்கால ஆசை காட்டியும், ஆன்மிக அரசியல் எனும் சூட்சும சொல்லோடும்  வழக்கம்போல ஊடகங்களுக்கு அவல் கொடுத்திருக்கிறார். கொள்கை விளக்கமெல்லாம் ஓராண்டு கழித்து தருவதாக அவகாசம் கேட்டிருக்கிறார்.

இந்த தருணத்தில், பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையிலும், எதிர்பார்ப்புகளுக்கிடையிலும்,  அவரின் அறிவிப்பை "நம்பிக்கை", "தகுதி ", "திறமை", "முன்னனுபவம்" என்ற நான்கு  கோணங்களில் பகுத்தறிய எழுதுகிறேன்.

4.1 நம்பிக்கை :-

பள்ளிப்பருவத்திலிருந்தே ரஜினியின் படங்களை பார்த்தவன் நான். மன்றங்களில் சேராவிட்டாலும், ரசிகனென மார்தட்ட மறுத்திருந்தாலும் ரஜினியின் படங்களை ரசிக்க மறக்காதவன் நான். பெரும்பாலானவர்களைப்போல் "அவர் ரொம்ப நல்லவர்" என்று நான் நம்பியவன் (அவரின் நடிப்பை வைத்து). இருபதுகளில் அறிவியல் உலகையும், முப்பதுகளில், வியாபார உலகையும் விளங்கியபின், நான் தெளியத்தொடங்கினேன், என் முற்கால செய்கை கண்டு நெளியத்தொடங்கினேன். ஒருவரின் தொழில், திறமை, வாய்ப்பு, வசதி, மாலை, மரியாதை, அறிவு, சிந்தை, செயல், எண்ணம், வண்ணம் என படிக்க கற்றபின், அவர் எனக்கு ஒரு சாதாரண பொழுதுபோக்கு பொம்மையானார், அவ்வளவே அவரும் உண்மையானார்.

இருப்பினும், அவர் மிகமிக நல்லவரென்றும், அவரென்றும்,  இவரென்றும், ஆழமான அறிவாளிகளும், மட்டமான மைந்தர்களும் ஆராதிக்கின்றனர், ஆமோதிக்கின்றனர். இது அவர்களின் நம்பிக்கை. ஆனால், எதைவைத்து நம்புகிறீர்களெனக்கேட்டால், ஒரு சிலரே யூகமில்லா  தான்கண்ட உத்தமமான பதில் தருகின்றனர், பெரும்பாலானோர் சொல்வது வெறும் கேள்வி ஞானமே.

திரைப்படத்தில் அவர் நடித்த கதை, ஏற்ற பாத்திரம், பேசிய வசனம், பாடிய பாடல் போன்றவற்றை சான்றாக கூறுவதை முட்டாள்கள் கேட்டுக்கொள்ளட்டுமென விட்டுவிடுவேன். எனக்கு என் அறிவுக்கேற்ற விளக்கம் தேவை, விளக்கம் இல்லாததுவரை, அது ஒரு விளங்காத பேச்சுத்தான்.

ஒருவர், ஒருவரின் நம்பிக்கையை நடிப்பால் பெறுவதற்கும், நடித்து பெறுவதற்கும் வேறுபாடுகளுள்ளன. அவர் நல்லவரேனும் அவர்மீதிருக்கும் நம்பிக்கையை நான் அப்படித்தான் பகுக்கிறேன்; நிசமா, நடிப்பா எனக்கேட்கிறேன்?

4.2 தகுதி :-

சட்டத்தினால் ஒன்றிணைத்துக் கட்டப்பட்டுள்ள இந்நாட்டில், குடிமகன் யாவரும் மக்களாட்சியின் மணிமுடியை கொய்யவரலாம், நாட்டை நல்ல வழியில் நகர்த்த வரலாம். மக்களாட்சியில் அது அனுமதித்து சம்பளம் கொடுத்து வைக்கப்பட்ட வேலை, அந்த வேலைக்கு திராணி இருப்பவர் வந்து நிற்கவேண்டுயது அவர்தம் கடமை. சட்டத்தகுதி சரளமாக இருக்கவேண்டும், அறத்தகுதி ஆயிரமாயிரம் இருக்கவேண்டும் வேண்டுமென்பது எனது  ஆசை மட்டுமல்ல, அது என் அறிவின் தேவையும்கூட.

ஒரு பொதுவேலையை செய்வதற்கான அறத்தகுதியாவன,

இருக்க வேண்டியது

  1. செய்வதற்கான விருப்பம்
  2. செய்து முடிக்கும் பொறுப்புணர்வு
  3. கிடைக்கும் கூலிக்கான விசுவாசம் 
 இருக்க கூடாதது
  1. சுய விருப்பு-வெறுப்பு
  2. சுயலாப உள்நோக்கம் 
  3. சுய சித்தாந்த கட்டாயம் 

இவைகளில், ரஜினிக்கு இருக்க வேண்டியவை இருந்தாலும், இருக்க கூடாதவைகளும் இருக்கிறன்ற என்பது என்னறிவு.

4.3 திறமை :-

திறமை என்பது ஒரு வேலையை ஒரு செய்து முடிப்பதற்கான உடல், உள்ளம், உயிர் சார்ந்த பலம், வேலையின் தன்மை சார்ந்த படிப்பு, பயிர்சி, தேர்ச்சி. இங்கே இந்திய அரசியலில் வெகு சிலரே அரசியல் சார்ந்த துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள், பெரும்பாலும் தலைவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்களாக, மக்களுக்கு ரசித்து பொழுதுபோக்க ஏதுவானவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலை, சரியில்லாதது, மாற்றவேண்டியது.

இங்கே மாற்றம் தேவை, அது ஆட்களில் இல்லை, அவர்தம் அறிவில், அவர் தம் சிந்தனையில், அவர் தம் செயல்தரத்தில். அவ்வகையில், பெரும்பாலான தலைவர்கள் பெரும்பாலும் திறமை அற்றவர்களாகவே இருக்கின்றனர்.

ஒலிம்பிக்கில் நாட்டிற்காக ஓடி வெற்றிகொள்ள, ஓடப்பழகியவன் மட்டுமல்ல ஓடி ஓடி இருகியவன்  தேவை, நமக்கு பிடித்தவனை அனுப்பினால் அவமானம்தான் மிஞ்சும், அவனுக்கும் ... நாட்டிற்கும். அவ்வகையில் ரஜினிகாந்த் எந்த ஒரு அரசியல் திறமையும் இல்லாதவராகவே தோன்றுகிறார், அவரை வெறும் மக்கள் விரும்பும் ஒரு மனிதராகவே காண்கிறேன். திறமை என்பது வேறு, மரியாதை என்பது வேறு.

4.4 முன்னனுபவம்  :-

ஒரு தலைமை வேலையாளனுக்கு முன்னனுபவம் மிகவும் முக்கியமானது. முன்னனுபவம் இல்லாதவனை வேலைக்கு அமர்த்த எந்த அறிவாளியும் விரும்புவதில்லை.

தலைமைப்பொறுப்பென்பது வெறுமனே ஒரு கூட்டத்தினை கட்டுக்கோப்பாக வைப்பது மட்டுமல்ல, பெரிய வேலைகளை உடைத்து சிரியவேலைகளாக்கி வேலைகளை ஒவ்வொரு வனுக்குக்கும் பிரித்துக்கொடுப்பதும், செய்த வேலைகளை சரிபார்ப்பதும், சரிபார்க்கப்பட்ட வேலைகளை இணைத்து அந்த பெரியவேலையை முடிப்பதும் ஆகும். ஒவ்வொரு சிறு வேலையையும் முன்பே செய்து பழகியிருத்தல் அவசியம், அதுதான் முன்னனுபவம்.

அத்தைகைய முன்னனுபவம் இல்லாதவன் தலைமையேற்பதென்பது, ஓட்டிப்பழகாதவன் கையில் ஒரு கப்பலை கொடுத்து ஓட்டச்சொல்வதுபோலாகும். அதிலும் ஒரு நாட்டை ஓட்டச்சொல்வது, அந்தக் கப்பலில் நாமும் பயணம்செய்வதுபோலாகும். இதை எழுதும்பொழுதே எனக்கு கைநடுங்குகிறது.

ஒரு கப்பல் கடலில் நகர்ந்துகொண்டிருக்கும்பொழுது அதன் மாலுமி தூங்கலாம், ஓய்வெடுக்கலாம், அடுத்தநிலை ஆட்கள் தேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், அதற்காக ஒரு மங்கினியை மாலுமியாக்கி மகிழ்ந்தால், அவன் தூங்கும்போது அவரின் ஆட்கள் பயணிகளை பார்த்துப்பார்த்து கொல்லவும் முடியும், அனுபவமற்ற மாலுமி அதை கண்டுபிடிக்கவும் முடியாது, கட்டிக்காக்கவும் முடியாது.

அரசியல், அரசாங்கம் சார்ந்த முன்னனுபவம் ஏதுமில்லா ரஜினி, முந்திக்கொண்டு முதல்வரானால்,  பயணிகளாகிய நாம் மூச்சடக்கி வாழ பழகவேண்டும், அதுவே அவருக்கு அரசியலில் முதல் அனுபவமாக இருக்கும். முன்னனுபவம் முக்கால் தாண்டல்.

5 முடிவுரை :-

இல்லை இல்லை அவர்ரொம்ப  நல்லவர், மிகவும் திறமைசாலி, பெரிய அறிவாளி, ஆன்மிக விஞ்ஞானி, அவர்.... இவர் என்று வாய் இனிக்கபிதற்றும் ரசிகசிகாமணிகளும், இப்படி ஒரு  பெரிய ஆளுமைதான் இன்றைய அரசியல் சூழ்நிலையில் மாற்றங்களை கொண்டுவரத்  தேவை எனக்கூறும் அரசியல் மேதைகளும், அவரைவைத்து அம்பானியாகத்துடிக்கும் வியாபார காந்தங்களும் என்னைத்தாண்டிவிட்டு செல்லும்படி அதிமேன்மையாக ஆணையிடுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுபற்றிய உங்கள் கருத்தை எனக்கு தெரிவிக்கவும்.