Tamil Kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil Kavithai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 26, 2010

மகனே வா... மறுபிறப்பே வா...

மகனே வா,
மறுபிறப்பே வா,
இயற்கை  எனக்களித்த
இன்னுமொரு வாய்ப்பே வா,
எழியவன் என்வழி வந்த
வலியவனே வா,
இனப்பெருமை ஏற்ற வந்த,
இன்னுமொரு  புலியே வா,
இடிதாங்கினும் இனம்காக்க
மடிதங்கியவனே வா,
எம்பேர் சொல்லவந்த
எம்பெருமானே வா,
எளியவன் நான் பிந்தும்
எல்லைகள் வெல்பவனே வா,
பெத்தவன் நானேந்தும்
பேராயுதமே வா,

எங்கப்பனிட்ட கட்டளைகள்
உங்கப்பனிடுகிறேன் கேள்,
மகனே கேள்,
மனிதராய் பிறந்தவர் பலர்,
மகானாய் இறந்தவர் சிலர்,
என் மகனாய் சென்று வா,
என் மகான் சிலர் வென்று வா....

அகிம்சையால் வென்ற காந்தியை,
அறிவியலில் வென்ற அயின்ஷ்டீனை,
ஆன்மிகம் வென்ற விவேகனை,
ஆசைகள் கொன்ற புத்தனை,
இலக்கியம் படைத்த கம்பனை,
இமயம் தொட்ட வரம்பனை,
ஈகையில் வென்ற தீரசிபியை,
ஈழத்தில் நின்ற வீரப்புலியை,
உண்மையை பேசிய சந்திரனை,
உரிமையை பேசிய சாகிப்பை,
ஊருக்கு உழைத்த  காமராசனை,
ஊமைக்கு  உரைத்த  ஈவேராவை,
எவனையும் கெஞ்சாத அம்மானை,
எமனையும் அஞ்சாத பொம்மனை,
ஏழையாய் வலம்வந்த கக்கனை,
ஏகாதிபத்யம் எதிர்த்த காரலை,
ஐயமற உரைத்த ஒளவையை,
ஐதீகம் உடைத்த லிங்கனை,
ஒளிகொண்ட புலவன் பாரதியை,
ஒப்பற்ற உரையாளன் அண்ணாவை,
ஒதிச்சென்ற அய்யன் வள்ளுவனை,
ஒளவை படைத்த ஆத்திச்சுடியை,
வென்றுவா.

இவரில் எவரேனும் வென்றுவா,
இல்லை இவர்பலரை தின்றுவா
என்தவம் தான்செய்தான்  இத்தந்தை 
எனும் இன்பமதை தா.

இந்நெறி நீ நன்செய்தால்.. 
இருக்கும்போதே எம்பேர் சாகும்,
இல்லாதபோதும் உம்பேர் வாழும்...


--
சாவண்ணா மகேந்திரன்

திங்கள், ஜூலை 27, 2009

எம்வீட்டு காளைகளே...

பசும்புல் நீங்க மேய
பாடநூல் நான் மேய்ந்து
பரீட்சையிலே பேர் வந்து
பல்லக்கிலே வேலை வந்து
உறவை தொலைச்சுப்புட்டு
நான் உட்காந்தேன் இங்கே வந்து -
உங்க நெனைப்பை தொலைக்கலேயே
நெனைச்சாலும் முடியலேயே

----
படிச்ச வயசில, பட்டிக்காட்டுல,
கட்டாந்தரையில, கரிசல் காட்டில,
உழத கட்டியில,
அருத்த வயலில, அடிச்ச கலத்தில,
வாய்க்கா வரப்புல,
புறகரையில, புல்வெளில,
பொங்கல் பூசையில, உங்க குளியலில.,
இப்படி ஒண்ணா ரெண்டா?
நாம் ஒட்டியிருந்த தருணங்கள்,
நீர் கொட்டிகொடுத்த நினைவலைகள்.

---
கட்டாந்தரையில, கவுந்து நீங்க ஓய்வெடுக்க,
கக்கத்துல ஒக்காந்திட்டு நெத்தி சொறிஞ்சிவிட,
நீங்க நெளிவாக தலை நீட்ட,
தொட்டு பரிமாறின நினைவு வந்து தலைகாட்ட,
இப்பவும் நீளுதுவேய் அனிச்சையாய் எங்கையி.
---
சண்டைக்காரன் பயிரோட சகவாசம் நீங்க வைக்க,
ஓங்கி அடிச்சிட்டாலும், ஒப்புக்கும் கோவிக்காம - எங்க
அப்பனுக்கு இருபொறப்பா, ஆத்தாலோட உடன்பிறப்பா,
உழைத்து உழைத்து எங்களை உலகத்திற்கு அனுப்பி வைத்து,
வெள்ளிக் கிழமை சந்தையிலே வெலையாகி போனமக்கா,
எங்கே இப்போ இருக்கியலோ, ஏரின்னும் இழுக்கிறியலோ,
நினைக்க பதைக்குதிய்யா நினைதுறந்த எம் உயிரு.
-------
கொட்டும் மழை ஒழுக,கொசுக்கடி ரணம் பெருக,
மூத்திர சகதியிலே,முழு இரவும் நின்ரீரே!
-----
உழைத்தே நைந்து போனீரோ - இல்ல
உலையிலே வெந்து போனீரோ
நினைக்க வேகுதய்யா நெஞ்சுநிலைகுத்தி போகுதய்யா.

----
உழைக்கத்தான் உம்பிறப்போ,
நீர் என்தாய் பெறாத உடன்பிறப்போ,
நீர் சளைச்சு நான் பார்த்ததில்ல, சம்பளமும் கேட்டதில்ல,
வாங்காத கூலிக்கு, வருசமெல்லாம் உழைச்ச உம்மை,
பெரிசா நெனைச்சதில்ல, பெருஞ்சிறப்பு செஞ்சதில்ல,
புரிஞ்ச இந்தப்புழு புண்ணியம் தெடிக்கொள்ள,
மறுபிறப்பு ஒண்ணு இருந்தா? மறக்காமல் நாம் பிறப்போம்,
உமக்கு நான் மாடாக, அல்லது, எமக்கு நீர் மக்களாக!

-- சாவண்ணா மகேந்திரன்

புதன், ஏப்ரல் 22, 2009

மழைத்தவளையாய்....2

தீவிரவாதம்
~~~~~~~~
பசித்த குழந்தை
பால்வராத முலைகடித்ததா
தீவிரவாதம்?




பார்வை போதும்
~~~~~~~~~~~~
கண்கள் மட்டும் சந்தித்துவிட்டால்
கழுதைக்கும் மலரும் காதல்
காக்கையின் மீதும்!



நிழலின் அருமை
~~~~~~~~~~~~
கடன் வாங்கி
கப்பம் கட்டி
டியூசன் வைத்து
உறவின்முன் பேசவைத்து
வெள்ளைமொழி கேட்டு மகிழ்ந்தார் அப்பா.

வாத்தியார் தேடிச்சென்று
வரிசையில் தெருவில் நின்று
விடுமுறையில் நடைமுறை கண்டு
விருந்தின்முன் பேசச்சொல்லி
பிள்ளைத்தமிழ் கேட்டு மகிழ்கிறேன் நான்.

கலிபோர்னியா வெயிலில் தெரிகிறது
நிழலின் அருமை!



கோழைத்தனம்
~~~~~~~~~~
உரிமை கேட்டு உருமும் எமை
முடக்கும் மும்முரத்தில் மறந்துவிட்டாய்
பல்லிளிக்கும் உன் கோழைத்தனம் மறைக்க!



குறையாண்மை
~~~~~~~~~~
உரிமைகேட்டு ஊரைக்கூட்டுபவன்
கேள்வியின் பதிலுக்கு கையாலாகாமல்
இறையாண்மை பேரைச்சொல்லி சிறையிலிடுகிறது
குறையாண்மை கூட்டம்.

வியாழன், நவம்பர் 13, 2008

மழைத்தவளையாய்...

திமிர்
===
நீ விட்டெறிந்ததை
தட்டேந்தாத எனை
திமிர் எனுமோ
உன் திமிர்


சமூக கந்தல்
=========
மூடைமூடையாய் துணியிருந்தும்
எப்போதும் கந்தலுடன்
எம் வண்ணானின் மகள்.

சமத்துவபுர கவி
==============
சமத்துவம் ஓதும் கவிஞன் நான் - அதை
போற்றி தொடுத்தேன் கவிதைஞான்
வந்து விழுந்தன ஒரேவரியில்
கவித்துவமான நல்வார்த்தைகளாய்
மளிகைக்கடை காரரும்
கைவண்டி காரனும்.

ஓர் மனப்பிரளயம்
================
எரியும் பூமி
உருகும் பனிமலை
சரியும் சந்தை
பெருகும் மந்தை
சுருங்கும் நிலம்
நிலத்தை பிரிக்கும் கோடுகள்
அதனால் விளையும் கேடுகள்
மொழியால் பிளவுபடும் தேசியம்
தேசியத்திற்கு பலியாகும் செம்மொழி
ஜாதிசதியால் கிளிபடும் மனிதம்
மனிதனால் வலுப்பெறும் ஜாதிவெறி
மனம் ஒவ்வாத இனகலப்பு
மானம் மழுங்கடிக்கும் நாகரீகம்
ஊரை சுற்றும் சாக்கடை
உயர உயரும் வேலிச்சுவர்
சுற்றி திரியும் சோம்பேறி
சுயநலம் போற்றும் சம்சாரி
சுருட்ட துடிக்கும் வியாபாரி
தன்மானம் இல்லாத அதிகாரி
தரித்திரம் படைக்கும் அரசியல்
சரித்திரம் படைக்கும் விலைவாசி
விவரம் அறியா எம்மக்கள்
விருந்தை விசமாக்கும் எம்தலைவன்
தனித்தே செயல்படும் ஒரே கொள்கை
தமிழரே படிக்காத தமிழ் கொள்கை
......
.......
இதுபோல் பிரச்சினை என்றும் பலபல
இன்னும் அடங்கா இச்சைகள் சிலபல
எதனை எப்படி களைந்தெறிவேன்
எல்லாம்வல்ல நான் முதலில்...

--
சவண்ணா மகேந்திரன்