சனி, ஆகஸ்ட் 15, 2009

சுதந்திர நாள் வாழ்த்துகள் ...

இன்று நண்பர்களுக்கும், இந்திய குடிமக்களுக்கு 62-வது சுதந்திரநாள் வாழ்த்துகள் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

ஆடு, மாடுகள் முதல் ஆண்டவன் படைத்ததாக கருதப்படும் அத்துனை உயிர்களும் சுதந்திரமான வாழ்க்கையையே வேண்டி விரும்புகின்றன. தனி நாடு கோரிக்கைகள் மட்டுமல்ல தனி வீடு, தனி குடித்தனம், தனி அறை போன்ற குடும்பவியல் கோரிக்கைகளும் சுதந்திரத்தை மையமாகக்கொண்டதே. உயிர்கள் பேணும் அத்தகைய உண்ணதமான சுதந்திரத்தை நமக்காக வருந்தி வாங்கிக்கொடுத்த தியாகச்செம்மல்களுக்கு இந்நாளில் தலைதாழ்த்தி நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம். முன்னோர் நமக்கருளிய இச்சுதந்திரத்தை இந்நாளைப்போல் எந்நாளும் கொண்டாடுவோமாக, பேணுவோமாக.

வியாபாரியாக வந்த மேற்குலக கொக்குகள் இருக்க இடம் கேட்டு, பின்பு கால்நீட்டி படுத்து, விலையாகிப்போன ராஜாக்களை ம-குடிப்பாம்பாக அடக்கி, நம்மிலேயே பிறந்த எத்தர்களை எளியவர்களின் எஜமானர்களாக்கி, அடிவருடிகளை அகங்கரம்மிக்க ஆண்டேகளாக்கி, ஜாதிவெறி பிடித்த ஜமின்களாக்கி, உழைக்கும் வாரிசுகளை ஊமைகளாக்கி, அவர்தம் உழைப்பை அட்டையென உறிஞ்சி உறிஞ்சி சுகபோக வாழ்க்கை வாழ்ந்த அந்த வேற்றுலக பிராணிகளை கத்தியின்றி ரத்தமின்றி விரட்ட விவேகமாக மிதவாதத்தை கையிலெடுத்த காந்திபுரத்தாரும், இரத்தம் குடிக்கும் அட்டைகளுகென்ன இரத்த தானமென சித்தம் தெளிந்த சுபாஷ், எதிரி ஏந்திய அதே கருவியேந்தி தீவிரவாதி என இகழப்பட்டு சில தலை எடுத்து, பல தலை கொடுத்து, விடுதலை வேட்கையோடு போராடி, ஒருவழியாய் பழம்தின்று கொட்டை சப்பிக்கொண்டிருந்த வெள்ளை கிழங்கள், மிச்சத்தை சுதந்திரமென காந்தியார் கையில்கொடுத்து காணாமல்போன 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள்முதல் இந்நாள்வரை, சுதந்திரநாளன்று குழந்தைகள் "ஜன கண மன" பாடிமுடிக்கும்போது மொழி புரியாவிட்டாலும் நெகிழ்ந்து, கண்ணீர்முட்ட, புல்லரிக்க தன்னிச்சையாக எழுந்து "ஜய ஜய ஜெயகே" என நாமும் பாடிமுடிக்கிறோம்.

காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பதைப்போல் அவரவர் நாட்டிற்கு அவரவர் சுதந்திரநாள் உணர்சிபொங்கும் ஒரு உன்னத திருநாளே, அத்தகைய நம் இந்திய சுதந்திரநாளை கொண்டாடும் அதே வேளையில், தெற்காசிய வல்லாதிக்க இசை நாற்காலி போட்டியில் இலங்கையில் அமர்வதற்கும் , பழைய பகை தீர்ப்பதற்கும், இலங்கை இனவெறி ராணுவத்தின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமான, நம் தாய்மொழி தமிழ் பேசும் ஈழத்தமிழ் இரத்த உறவுகளின், சுதந்திர மீட்டெடுப்பு போராட்டத்தை, முன்னெடுத்துச்சென்ற தமிழீல விடுதலை புலிகளின் யுக்திகளை, இலங்கை இனவெறி ராணுவத்திற்கு ரேடார் மூலம் காட்டிக்கொடுத்து, இன்னும் பல கொலைக்கருவிகள் அவர் வாங்கிகுவிக்க பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக்கொடுத்து, நமது வரிப்பானத்திலேயே நம் இரத்த உறவுகளுக்கு வலைபின்னி, பல்லாயிரம் தமிழர்களை கொலை செய்து, அவர்தம் விடுதலை போராட்டத்தை அடியோடு அழித்து, மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்து, அடிமைப்படுத்தி, இன்று தனது 62-வது சுதந்திரநாளை வெகு விமர்சையாக கொண்டாடும் எனது இந்திய திருநாட்டை நினைக்கும்போது நம் நெஞ்சு பதறுவதும் நிதர்சனமே.

தன் நாட்டு மக்களின் பாதுகாப்பான, சுகமான வாழ்கையின் பொருட்டு, மாற்றானின் சுதந்திரத்தை களவாடிய கீழான செயலை செய்த ஒரு நாட்டின் குடிமகனாக இந்தநாளில் சிறுமை அடைகிறேன். அத்தகைய வாழ்க்கை பழக்கமில்லை எம் முன்னோருக்கு. நம் மறத்தமிழன் மானத்தையும், அதற்கு பொருந்தும் இந்தியத்தையும் தலைகொடுத்தேனும் அல்லது வழி தவறும் வலியோரின் தலைஎடுத்தேனும் காப்போமாக.

ஈழத்தமிழர் மட்டுமல்ல இன்னும் பல இனங்கள் இப்பூமிப்பந்தில் ஏதேனும் ஒரு வகையில் அடிமைப்பட்டுத்தான் கிடக்கின்றன, அவர்தம் அடிமைத்தலை நீக்கி விரைவில் வெளிச்சம் கண்பார்களாக, நாம் அவர்தம் விடுதலையை ஆமோதிக்கும் மனம் பெறுவோமாக.

சுதந்திரம், ஒவ்வொரு உயிரின் பிறப்புரிமை.
மறுப்பதும், தடுப்பதும் உயிரியளுக்கெதிரான குற்றங்கள்.
நம் சுகத்தைவிட, மாற்றானின் சுதந்திரம் முக்கியமானது.
கருத்தில்லேற்போமாக, கவனம்கொள்வோமாக.

இந்தநாள் போல் எந்தநாளும் போற்றுவோம் சுதந்திரத்தை பேணுவோம் மனிதத்தை.

வாழ்க இந்திய சுதந்திரம்.
--
சாவண்ணா மகேந்திரன்.